ரங்கா படவிமர்சனம்
தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிபியின் ஒரே பலவீனம், சில நேரங்களில் அவரை அறியாமலேயே அவருடைய வலது கை செயல்படும். வலது கையில் ‘ஸ்மைலி பால்’ இருந்தால் மட்டுமே அந்த கை அவரது மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் நாயகன் பணிபுரியும் அலுவலகத்தில் பணியில் சேரும் நிகிலா தனது சிறுவயது தோழி என்பதை தெரிந்து கொள்ளும் சிபி, நட்பில் நெருக்கமாகி, காதலாக… பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கு குலுமனாலி செல்ல, அங்கே தான் பிரச்சினை ஆரம்பம். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கும் தம்பதிகளளின்அந்தரங்கம் ரகசிய கேமராக்கள் மூலம் படமாகிறது. இதை கண்டு பிடிக்கும் சிபிக்கும் வில்லனுக்கும் மோதல்.. துரத்தல்…
போராட்டங்களை கடந்து வில்லன் கூட்டத்தை சிபி களையெடுத்தாரா? தனது அந்தரங்க படங்களை அழித்தாரா என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் வில்லன் கூட்டத்திடம் சிக்கிய பிறகு பயந்து ஓடும் காட்சிகளில் நிறைவான நடிப்பு. கிளைமாக்சில் அதிரடி நடிப்பிலும் கவர்கிறார். நாயகி நிகிலா விமலுக்கு பெரும்பாலான காட்சிகளில் அவரது கண்களே பேசி விடுகின்றன.
வில்லனாக வரும் மோனிஷ் ரஹேகா மிரட்டுகிறார். சிபியின் நண்பனாக வரும் சதீஷ் சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். குளுகுளு குலுமனாலி காட்சிகள் தொடங்கி கார் சேசிங் காட்சிகள் வரை ஓடோடி உழைத்திருக்கிறது, அர்வியின் கேமரா. ராம் ஜீவனின் இசையில் பாடல்கள் மெல்லிசைக்கு கொடுத்திருப்பது புது ஜீவன். இயக்கிய வினோத், விபரீத கதைக்களத்தில் பயணித்தாலும் தடம் மாறாமல் படத்தை கரை சேர்த்திருக்கிறார்.
வயதான பாட்டிகளுடன், ‘நயன்தாரா,ஹன்சிகா’ என ஓடிப் பிடித்து மனோபாலா விளையாடும் காட்சிகளுக்கு பெயர் காமெடியா?
Leave a Reply